ஒரு கவிதையை...


அழைப்புமணியை அழுத்திய விதமும்
அவிழ்த்தெறிந்த காலணிகள்
வீழ்ந்துகிடக்கும் கோலமும்
அறிவித்துவிட்டன
உன் கோபத்தை.

வீசியெறிந்த கைப்பைவழியே
சிதறிக்கிடக்கும் சில்லரையோடு
கிழிந்துகிடக்கும் மாத்திரை பட்டையும்
தெரிவித்துவிட்டன
உன் சோர்வை.

தவிற்கமுடியாத
சில நாட்கள் இப்படியும்
எஞ்சியதில் பாதியை
எரிச்சலோடும் கழித்ததுபோக‌

ஓய்வாய்,அமைதியாய்
இருக்க இயலும்
என்றாவது ஒருநாள்
முயற்சித்துப்பாரேன்
ஒரு கவிதையை
எழுதவோ, வாசிக்கவோ.

Comments

  1. ஒரு கவிதையை
    எழுதவோ, வாசிக்கவோ.//
    முடிந்தால் சோர்வும்,முடிந்தால்
    ஆனந்தமும்,உற்சாகமும்
    சொந்தமாகுமே!!

    ReplyDelete
  2. "துள்ளாத மனமும் துள்ளும்".பாடலில்
    கீதத்தின் பெருமையை ஒரு
    கீதத்தின் மூலமாகவே மிக
    அழகாகச் சொல்லிப்போவார்
    பட்டுக்கோட்டையார்
    தங்கள் படைப்பும் அதையே
    மிக அழகாகச் செய்து போகிறது
    நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment