ஒரு சிறிய சுயநலம்


"நியாயத்தின் குரலை
நாம் கேட்கத் தொடங்கும்போது
ஒரு சிறிய சுயநலம்
நம்மைச் சுற்றியுள்ள இரைச்சல்களை
அதிகப்படுத்திவிடுகிறது"


மனுஷ்யபுத்திரனின் இந்த கவிதைவரிகள் தனிமனித மனத்தின் வெளிப்பாடாய் தொன்றினாலும்  பெரும்பாலும் அது எல்லா மனிதருக்கும், காலத்திற்கும், தேசத்திற்கும், சூழ்நிலைக்கும் பொருந்துவதாய் அமைந்துவிடுவது சிறப்பு.

நாம் அன்றாடம் சந்திக்கும் எந்த அவலத்திற்கு பின்னாலும் தர்கரீதியாய் ஒரு நியாயமீரல் (நியாயமீரல் என்றாலே அது அநியாயம்தானே?)  இருக்கத்தான்செய்கிறது. ஆனால் மனம் அந்த அநியாயத்தை உணரவிடாமல்தடுக்க அதிகாரவர்கத்தின் கைக்கூலிகள் அவர்களுக்கு சாதகமான காரணிகளால் கட்டமைக்கப்பட்ட காரண‌த்தையே நம்பும்படி நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள்.

சென்றமுறை உள்ளாட்சித்தேர்தலில் சுயேச்சையாய் போட்டியிட்டு வென்ற ஒரு கவுன்சிலர் இந்தமுறை தோற்றுப்போகிறார், இத்தனைக்கும் அவர் கவுன்சிலராய் இருந்த காலத்தில்தான் பொதுக்கிணறு தூர்வாரப்பட்டு குடிநீர் அனைத்துபகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் காலைக்கடன் கழிக்க வெட்டவெளிகளில் இருட்டோட ஒதுங்கவேண்டியிருந்தநிலையில் பகல்வேளை வயிற்றைப்பிசைந்தால் எங்கேபோவதென கையைப்பிசைந்துகொண்டிருக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பிடமும், அதற்குத்தேவையான‌ தண்ணீர் வசதியும் அமைத்துகொடுத்ததும் அவர்தான். ஒரே நியாவிலைக்கடையில் அதிகப்படியான குடும்ப‌அட்டைகள் இருந்தபடியால் ஏற்ப்பட்ட கூட்டநெரிசலையும் அதனால் மக்கள்படும் அவதியையும் தவிர்க்கவேண்டி மேலிடங்களுக்கு கடிதங்கள் மூலமும் கையொப்பங்கள் மூலமும் உண்மையிலேயே போராடி 3 புதியகடைகளை திறக்கவைத்து சாதனைசெய்தார். ஆனால் அதையெல்லாம் மறந்த மக்கள் இந்தமுறை வேருஒருவரை கவுன்சிலராக்கிமகிழ்ந்தனர். காரணம் அவர் சுயேச்சையாய் வெற்றிபெற்றதை விரும்பாத அரசு( அவர் மட்டுமல்ல யார் சுயேச்சையாக வென்றாலும் எந்தகட்சிக்கும் பிடிக்காது. ஒன்று அவரை தன் கட்சிக்கு இழுக்கப்பார்க்கும் அல்லது அவரை அவர் வேலையை செய்யவிடாமல் தடுக்கும். இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என எந்தபேதமும் இல்லை) அவருக்கு போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்பதுநிஜம். இதனால் கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச தொலைக்காட்சிபெட்டி ஆகியவை பெற்றுத்தருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது, பெரும்பாலானவர்களுக்கு அது கிடைக்காமலேயேபோனது. அதற்குக்காரணம் அவரில்லை என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கவில்லை. நல்லவை பல செய்திருந்தாலும் இந்த ஒரு காரணம் மட்டுமே அடுத்தமுறை அவரை தோற்றுப்போகச்செய்தது எனபதுதான் உண்மை. நமக்கு டீவி கிடைக்கவில்லை என்ற ஒட்டுமொத்த சுயநல இரைச்சலில் நியாயத்தின் குரல் கேட்காமல் போய்விட்டது.  இதன் விளைவாய் நிகழக்கூடியது,

1 அந்த சுயேச்சை அரசியலிலிருந்து விலகலாம்,

2 அடுத்தமுறை ஏதாவது கட்சியின் சார்பில் மக்களுக்கு நேரடியாய் ஓட்டுக்கு 500ரோ 1000மோ கொடுத்து போட்டியில் செயித்து அனைத்து நலத்திட்டங்களுக்கான நிதியையும் தனக்கும் தன்சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கிவிட்டு நிம்மதியாய் இருக்கலாம்.

இது தேவையா?


Comments

  1. அகலிகன் சார்,

    எந்த நேர் கோடும் நேராய் இருப்பதில்லை, உதாரணம் ஒரு நேர் கொடு வரைந்து அதை நூறு மடங்கு பெரிதாக்கினால் அதில் பல வலது இடது வளைவுகள் இருக்கும் அது போல தான் ஜன நாயகம் போன்ற பெரிய அமைப்பில் மேல் தளதில் சரியாக வடிவமைக்க பட்டாலும் அடி தளத்திற்கு செல்லும் போது பல இடங்களில் விதிகள் வளைக்க படும், தவிர்க்க முடியாது. அதற்காக அந்த வடிவமைப்பு முற்றிலும் தவறு என்றும் சொல்ல முடியாது

    சேவை செய்வதே நோக்கம் என்றால், பெரிய கட்சி ஆதரவிருந்தால் அது சுலபமாகும் என்றால் அவர் பெரிய கட்சியில் சேர்வது தவறே இல்லை. ஏன் என்றால் இங்கு கட்சிகள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை சேவை செய்ய நல்ல மனங்கள் கிடைப்பதே பிரச்சனை.

    ReplyDelete
  2. மனித மனம் வக்கிரத்தை தான் அதிகம் விரும்புகின்றது. இன்று நேற்றல்ல. இது ஆதிகாலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது. நேர்மை என்பது மனதளவில் உள்ள செயல். ஆனால் செயலாக்கத்திற்கு வரும் போது அதன் பார்வை வேறு விதமாக போய் விடுகின்றது. தமிழ்நாட்டில் உணர்ந்து ஓட்டுப் போடுபவர்கள் ஒரு சதவிகிதம் அளவுக்கு கூட இருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு முன்னால் ஒரு நாள் முந்தைய நாளில் கூட குழப்பத்துடன் இருப்பவர்களை பார்த்து இருக்கின்றேன். ஆட்கள் அவர்களின் சேவைகள் முக்கியமல்ல. காட்சி ஊடகங்கள் முன்னிலைப்படுத்துபவர்கள் தான் முக்கியம்.

    அடிப்படையில் தோற்ற கட்சிக்கு தோற்கும் கட்சிக்கு தன்னுடைய ஓட்டு போய்விடக்கூடாது என்று கூட்டத்தோடு கும்பலாக மாறிப் போன ஜனத்திரள் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டு இருந்தாலும் மாறத் தயாராய் இல்லை என்பது நிதர்சனம்.

    ReplyDelete
  3. Suresh said இங்கு கட்சிகள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை சேவை செய்ய நல்ல மனங்கள் கிடைப்பதே பிரச்சனை.

    பெரிய கட்சிகள் பணபலத்தின் அடிப்படையில் சீட் ஒதுக்குவதால் நல்ல மனத்தைவிட நிறைய பணத்திற்குத்தான் முன்னுறிமை.

    Jothiji said தேர்தலுக்கு முன்னால் ஒரு நாள் முந்தைய நாளில் கூட குழப்பத்துடன் இருப்பவர்களை பார்த்து இருக்கின்றேன்.

    மக்களை பயத்துடனும் குழப்பத்துடனும் வைத்திருப்பதே அரசனுக்கு பாதுகாப்பானது என்று அர்த்தசாஸ்த்திரம் சொல்கிறது. ஆளநினைப்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment