நாங்கள்


நீள அகலங்களால் நிர்ணயிக்கப்பட்ட
கண்ணாடி கடலுக்குள்
நீந்த அனுமத்திருக்கிறோம்
மீன்களை,

சன்னல் வழி நுழைந்து
கதவுவழி வெளியேறும்
சிட்டுக்குருவிக்கு
நெல்லும் தண்ணீரும்
வைத்திருக்கிறோம்,

மீன்குழம்பு உண்கையில்
முள்ளோடு கொஞ்சம்
சோறும்தந்துதிருக்கிறோம்
பூனைக்கு,

தெருவில் அலைந்துகொண்டிருந்த
நாய் குட்டிகளில் அழகாய் இருந்த
ஆண்குட்டியை வளர்த்திருக்கிறோம்
மரத்தடியில் கோணிபோட்டு,

பிர்ட்ஜிற்குள் தேங்கிக்கிடக்கும்
பழையதில் பழை..யதை
கழுநீரோடு கலந்து
கொடுத்திருக்கிறோம்
வாசலில் வந்துநிற்கும்
பசுவிற்கு,

அம்மாவாசை தவறாமல்
அன்னம் வைத்திருக்கிறோம்
காக்கைக்கு,

இப்படியும்,
இன்னும் சிலவாயும்
எங்கள் ஜீவகாருண்யம்.

Comments

  1. மனதில் சலனங்களை ஏற்படுத்தும் கவிதை..

    வாழ்த்துகள் நண்பரே

    நிகழ்காலத்தில் சிவா
    http://arivhedeivam.blogspot.com/

    ReplyDelete

Post a Comment