வன்முறைக்கு அப்பால்

ஆறு வயசு குழந்தை தன் தந்தை கையால் நறுக்கு நறுக்குன்னு தலையில குட்டு வாங்குவதை பார்க்க்கும்போது மனசு பதறுது. ஒரு சின்ன குழந்தைமேல ஏன் இவ்வளவு கோபம். காரணாம் ஒரு பென்சிலை தொலைத்ததாகவோ, கூப்பிட்ட குரலுக்கு வரவில்லை எனபதாகவோதான் இருக்கமுடியும். அதற்கு இத்தனை வன்மம் சரிதானா?  அப்படி பார்த்தால் போபர்ஸ் ஊழல் வழக்கு சம்பந்தமான ஆதார கோப்புக்களை விமான நிலையத்தில் பரிகொடுத்தற்காகவோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமருக்கும் தொடர்பு இருப்பதாக நிறுபிக்கும் ஆவணங்களை மறைந்துவிட்டதற்காகவோ சம்பந்தப்பட்டவர்களை எத்தனை முறை குட்டவேண்டும்?

பொதுவாகவே கோபம், வெறுப்பு, வன்முறை என்றாலே அது ஆண்கள்தான் என்றும் பெண்கள் சாந்த சொரூபிகள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லது நிறுவப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆறு வயது குழந்தை தலையில் குட்டு வாங்குவதை எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்கள்தான் ஆண்களைகாட்டிலும் ஆபத்தானவர்கள்.

பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதிதான் குழந்தைகள்மீதான வன்முறைகள் நிகழ்கிறன. கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவலைபடும் நாம் எதன் அடிப்படையில் அவற்றை முடிவுசெய்கிறோம்? நாம் படித்த காலமும் கல்வியும் இன்றைய காலத்துடன் ஒப்பிடக்கூடியதா? ஒப்பிடக்கூடியதுதான் என்று நினைத்தாலும் அல்லது அதைக்காட்டிலும் உயர்வானதாய் நினைத்தாலும்  ஒவ்வொரு தேர்வு முடிவுகளுக்கு பின்னாலும் பள்ளிகள் மீது விதிமீறல் புகார்களும் ,மாணவர்களின் தற்கொலைகளும்  ஏன் நிகழ்கின்றன?

''Mass production takes no note of the real requirement of the consumer"  இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மொத்தமொத்தமான உற்பத்தி பற்றிய மகாத்மாவின் கருத்து இது. அவை தேவைகருதி மேற்கொள்ளப்படாமல் லாபம் கருதி  செயலபடுவதால் அதை  எப்படியெல்லாம் நம்மேல் திணிக்கின்றன என்பது அறிந்ததே.  

இன்றைய கல்விநிறுவனங்களூம் தனி மனிதனுக்கு எத்தகைய கல்வி வேண்டும், சமுதாயத்திற்கு அது எவ்வகையில் உதவும் என்பது பற்றிய அக்கரையில்லாமல் எல்லோரையும் மருத்துவர்களாகவும், பொறியாளாராகவும் தயாராகக்கூடிய பண்டங்களாய் உருவாக்கும்  ஒருவகை Maas Production  வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

இத்தகைய தயாரிப்புகளே பெற்றோரின் விருப்பமாகவும் வெறியாகவும் , கனவாகவும் இருப்பதால் குழந்தைகள் மந்தையிலிருந்து விலகிவிடாமல் கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். விலகிவிடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை.




Comments

  1. அழகான பதிவு.

    நானும் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் இது போன்ற பல விசயங்களுக்காக போராடிக் கொண்டுருக்கின்றேன்.

    தலைமையாசிரியர் என்னைக் கண்டாலே பயந்து நடுங்க நிர்வாகம் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க குழந்தைகளின் ஆசிரியர்கள் என்னைக் கண்டாலே அலறத் தொடங்கி விடுகின்றனர்.

    சிலவற்றையாவது மாற்ற முடியுமா? என்று என்னளவில் நிறைய காரியங்களை செய்வது வழக்கமாக இருப்பதால் மந்தையில் இருந்து வெளியே வரக்கூடிய இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

    பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மந்தைதனம் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள சிறந்தவழியாய் நான் கடைபிடிப்பது குழந்தைகள் படபடப்பாய் சொல்லும் எதையும் படபடபில்லாமல் கேட்டுக்கொண்டு இதுதானே சரி பாத்துக்கலாம் அப்பா சொல்லித்தறேன் என்று சொல்வது. அவர்களுக்கு அதுவே பாதி டென்ஷனை குறைத்துவிடும்.

      Delete
  2. குழந்தைகளை அவர்களுடைய வளரும் பருவத்தில் கண்டித்து வளர்ப்பது வன்முறை என்றால் பிறகு எப்படித்தான் வளர்ப்பது? அத்தகைய வன்முன்றையினால் அவர்கள் மனத்தளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை எதை வைத்துச் சொல்கின்றனர்? இன்று இதை மிகவும் ஆக்ரோஷத்துடன் எதிர்க்கும் தலைமுறையும் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் அப்படி கண்டிக்கப்பட்டு வளர்ந்தவர்கள்தானே? அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிட்டதா என்று பார்த்தால் இல்லையென்றே தோன்றுகிறது. இன்று உலகெங்கும் சென்று தங்களுடைய அறிவாற்றலால் உலகையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்த தலைமுறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமே அவர்களுடைய பெற்றோர்கள் செய்த தியாகமும் பொறுப்பான வளர்ப்புமுறையும்தான். இங்குமட்டுமல்ல, உலகெங்கும் இந்த தலைமுறை பல வியத்தகு சாதனைகளைப் படைக்கிறது என்றால் அது முந்தைய தலைமுறையின் பொறுப்பான வளர்ப்புமுறைதான்.

    ஆனால் இத்தகைய சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் இந்த தலைமுறை தங்களுடைய குழந்தைகளை எவ்வித கண்டிப்பும் இல்லாமல் வளர்ப்பதைப் பார்க்கும்போது எதிர்கால தலைமுறை எப்படி இருக்குமோ என்று எண்ணிப்பார்க்கவே பயமாக உள்ளது. இங்கு மட்டுமல்ல உழைப்புக்கு பெயர்போன ஜப்பான், சைனா போன்ற நாடுகளிலும் இன்றைய குழந்தைகள் உண்பதிலும் உறங்குவதிலும்தான் திறமையுள்ளவர்களாக உள்ளனர். obesity என்ற வியாதியால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மனபாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர் என்கிறது சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

    குழந்தைகளை கண்டிப்பதையும் ஊழல்களில் ஈடுபடுவர்களையோ அல்லது கோப்பு காணாமல் போக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்பதையும் சேர்த்து குழப்பக் கூடாது. குழந்தைப் பருவத்தில் செய்யப்படும் கண்டிப்பு தண்டிப்பாகாது. அது குழந்தையை நல்வழிப்படுத்தும். வீட்டில் கண்டிப்பே இல்லாமல் இருப்பதால்தான் பள்ளியில் ஆசிரியர்கள் சிறிதளவு கண்டித்தாலும் அதை பெரிதுபடுத்துகின்றனர் இன்றைய குழந்தைகள்.

    கண்டிப்பு வேறு வன்முறை வேறு. பெற்றோர் குழந்தையிடம் காட்டுவது கண்டிப்பு மட்டுமே, மறந்துவிடாதீர்கள். அது எல்லை மீறும்போதுதான் பிரச்சினை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பார்வையும் ஆதங்கமும் சரியானதுதான் ஆனால் நான் குறிப்பிட்டிருப்பது ஆறு வயது குழந்தையை.மேலும் கோப்பு காணாமல் போனதற்கும் குழந்தை வன்முறைக்க்கும் முடிச்சு போடவில்லை இந்த அற்ப விஷயத்திற்கே இவ்வளவு கோபப்படுபவர்கள் கோப்பு காணாமல் போனது என்று கூறும் அயோக்கியத்தனத்திற்கு வாய்மூடிகிடக்கின்றோமே என்ற ஆதங்கத்தைதான் கூறி இருக்கிறேன். மேலும் கண்டிப்பு என்பது பிள்ளைகள்மேல் ஏற்படும் அக்கறையால் என்றால் ஏற்றுக்கொள்ளாம். நானும் அடிவாங்கியவன்தான் அது என் நான்காம் வகுப்பிற்குபிறகுதான் அதுவும் ஸ்கேலால் ஒரு அடி அல்லது காதைபிடித்து ஒரு திருகு அவ்வளவே,ஆனால் இன்று நிலமை குழந்தைகளிடம் அதிகமாய் எதிர்பார்த்து அதை அவர்களிடமிருந்து பெறமுடியாமல் போகும்போது எழும் கோபம் பக்கத்துவீட்டு குழந்தையைவிட மார்க் குறைந்துவிடுமோ என்ற பயம் எல்லாமுமாக செர்ந்து பெற்றோரை பதட்டமடைய வைக்கிறது.அது சில அடிகளாகவும் திட்டுக்களாகவும் குழந்தைகளை அடைகிறது. இது பெற்றோர் பார்வையிலிருந்து கண்டிப்பு என கொண்டாலும் குழ்ந்தைகள் பார்வையிலிருந்து
      வன்முறைதானே?

      Delete
  3. மிக நல்ல அலசல், பாராட்டுக்கள்.
    குழந்தையை திருத்துறோம்னு மட்டும் அடிக்கறதில்லை, அவன் திருப்பி அடிக்கமாட்டான் என்கிற தைரியத்திலும்தான் அடிக்கிறாங்க. கோப்புகளை காணும்னு அங்க போய் கேட்டா சப்ப்புனு ஒரு அறை கிடைக்கும் அதனால தான் ஐம்புலன்ங்களையும் அடக்கி வாசிப்பாங்க.. இரண்டாவது அப்பெல்லாம் அடிவாங்கினாலும் ஆதரவா அனைக்கிறதுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா சொந்தங்கள் இருந்தாங்க இப்ப அதெல்லாம் வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள்,உண்மைதான் 'இனிமே இப்படி செய்யமாட்டேன்னு' 100 தடவை எழுதச்சொல்வாங்க எங்கபாட்டி தாத்தாவேலையிலிருந்து வந்ததும் சரிசரி 50 தடவை எழுது போதும் பாட்டிகிட்ட நான் சொல்றேன்னு சொல்வார். பாட்டிக்கும் அது காதுல விழும் அத்துடன் அவ்வளவுதான். 50 தடைவையோடு தண்டனை முடிவடையும்.

      Delete
  4. அருமையா பெற்றோர் வன்முறை பற்றி சொல்லியிருக்கீங்க.
    //இன்றைய கல்விநிறுவனங்களூம் தனி மனிதனுக்கு எத்தகைய கல்வி வேண்டும், சமுதாயத்திற்கு அது எவ்வகையில் உதவும் என்பது பற்றிய அக்கரையில்லாமல் எல்லோரையும் மருத்துவர்களாகவும், பொறியாளாராகவும் தயாராகக்கூடிய பண்டங்களாய் உருவாக்கும் ஒருவகை Maas Production வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது.//
    முழுக்க உண்மை.

    ReplyDelete
  5. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.... நேற்று ஒரு தந்தை பள்ளியில் தன் மகனை அடித்து விட்டதாக வருந்தினார்...நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் தானே ஆசிரியர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது என்று கூறியதற்கு அவரிடமிருந்து பதிலே இல்லை...

    ReplyDelete
  6. யானை தடவிய குருடனாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்துக்கொண்டு எதிர்காலத்தை அளப்பதினால் வரும் பிரச்சனைதான் இது. நன்றி.

    ReplyDelete

Post a Comment