தகரக்கூடுமோ தார்மீகம்?

இப்பவெல்லாம் ஒரு பூ விக்கறவரு என்னை உதாசீனப்படுத்தினாலும் ஏனோ தெரியல பன்னாட்டு நிறுவனங்களின் நியாபகம் வந்து கூடவே பயமும் பத்திக்குது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்க அதுமாதிரியாகூட இருக்கலாம். 

போன வியாழக்கிழமை சாயங்காலம் ஆடி வெள்ளிக்கிழமைக்காக சாமிக்கு பூ வாங்க போன இடத்துலதான் இந்த பயம் தொடங்கிச்சி. ஒருமுழம் 30 ரூ அதுக்கு கொறச்சி எந்த பூவுமே இல்லை. நாலுபேர்கிட்ட 25 ரூக்கு கேட்டுபாத்ததேன் யாரும் தராப்போல தெரியல, சரி நமக்கு தெரிந்தவர் மார்கெட்ல பூ விக்கறார் அவர்கிட்ட போனேன். நான் போன நேரம் அவர் கிட்டதட்ட வியாபாரத்தை முடிச்சிட்டார் போல ஒரு முழமோ ஒன்றை முழமோதான் தட்டுல இருந்தது. ஆனாபாருங்க அவரும் அதே 30 ரூபாதான் சொன்னார். அவர்கிட்டயும் 25ரூவாக்கி கேட்டுபாத்தேன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். கடைசி அஸ்திரமா "என்னப்பா தெரிஞ்சவர்ன்னுதானே அவ்வளவு தூரத்திலிருந்து வரேன்  அதுவுமில்லாம உங்கிட்ட கடைசியா இவ்வளவுதானே இருக்கு கொடுத்துட்டு போயேன் என்றேன்" "சர்தான் போசார் இங்க தெரிஞ்சவன் தெரியாதவன் எதும் கிடையாது, நீ வாங்காட்டி இன்னொருத்தன் வாங்கிட்டுபோகப்போறான்  இன்னிக்கி டிமாண்டு அப்படி தெர்தா" ன்னு சொல்லிட்டு அவன்பாட்டுக்கு பணத்தை எண்ணஆரம்பிச்சுட்டான். 

ஒரு பொருளுக்கு சந்தையில் தேவை அதிகமா இருக்கும்போது எந்த வியாபாரியுமே அதை தவறவிட விரும்பமாட்டான். பூவின் டிமாண்ட் என்பது ஒவ்வொரு விசேஷ தினத்திலும் தானாய் ஏற்படுவது. இந்த டிமாண்டை எந்த ஒரு தனி பூ வியாபாரியும் செயற்கையாய் ஏற்படுத்திவிடமுடியாது. அதற்கு மிகப்பெரும் முதலீடு தேவைப்படும்.சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யவரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலத்தாலும் அதிகாரத்திலிருக்கும் அவர்களின் அடிவருடிகளாலும் இத்தகைய டிமாண்டை மிகச்சுலபமாய் ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முழம் பூ இல்லை என்றால் எந்த அம்மனோ, ஆண்டாளோ அழப்போவதில்லை. ஆனால் இதே டிமாண்டை அத்தியாவசியத்தேவையான அரிசி, பருப்பில் கையாண்டால் பசியில் பிள்ளைகள் அழும். வசதியுள்ளவன் வாங்குவான், வாங்கமுடியாதவன் வன்முறையில் இறங்குவான். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் மது ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது.  இனி ரத்த ஆறும் ஓடக்கூடும். (எனக்கேகூட ஒரு கட்டத்தில் ஒருமுழம் பூ 30ரூபாவா மவனே என்னங்கடா அநியாயமா இருக்குன்னு ஒரு கோபம் வரத்தான் செய்தது). இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனையாக தெரியலாம் என்னமோ எனக்கு இப்படியெல்லாமும் நடக்க வாய்ப்பிருப்பதாய் பயம் தோன்றுகிறது. 

அதான் சில்லரைவர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை விருப்பப்படாத மாநிலங்கள் அனுமதிக்க தேவையில்லை என்று சொல்லிட்டாங்களே அம்மாவுந்தான் அதை அனுமதிக்கலையே அபுறமென்னன்னு நீங்க கேட்பது புரியுது சில்லரை வர்த்கம்ன்னு சொன்னது ஒரு புரிதலுக்காக, மற்றபடி அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் லாபத்திற்கான  முறைகள் மட்டுமே கடைபிடிக்கப்படுமே தவிர,  தார்மீகங்கள்  த க ர் க் க ப் ப டு ம் என்பதில் சந்தகம் இல்லை.

Comments

  1. எளிமையாகச் சொல்லிப்போனாலும்
    சிந்தனை ஆழமானது
    நீங்கள் சொல்லிப்போன பூ
    பூ மட்டும் இல்லையென்பதைப்போல..
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிச்சயம் வெளிநாட்டு முதலீடு உள்ளே வர வேண்டும் என்றே நினைக்கின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வதை விட பலவற்றை உடனடியாக குறிப்பாக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த நாடு பல பாடம் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ஐந்தாண்டுகளில் என்றால் ஏற்கனவே உள்ளது எல்லாம் காங்ரஸ் கைங்க்கரியம்தானே அதனால் மறுபடியும் காங்ரஸ்தான் வரவேண்டும்ன்னு சொல்லவரீங்களா? . BJP வந்தால் ஒரு கண்துடைப்பிற்காகவாவது சில கட்டுப்பாடுகளை விதிப்பதுபோல் பாவலாகாட்டும். பின் மெல்லமாய் தன் சுரண்டலை தொடங்கும்.
      இந்தியா ஒரு பொன் முட்டையிடும் வாத்து (அல்ல) டைனோசர் ஐந்து ஆண்டுகளில் அறுத்துவிடமாட்டார்கள், அறுக்கவும் விடமாட்டார்கள்.

      Delete
  3. எல்லாமே வரட்டும்... ஆனாலும் "வெளங்காது" என்பது மட்டும் புரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. சரிதான், இன்னும் என்னவெல்லாமோ பார்க்கவேண்டி இருக்கு இதுக்கே இப்படின்னா எப்படி. இன்று மறைமுகமாய் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலங்களில் நாளை பன்னாட்டு நிறுவனங்கள்தான் விவசாயம் செய்யப்போகிறது. விளையும் பொருட்கள் அதிக லாபம் கிடைக்குமாயின் ஏற்றுமதிதான் செய்யப்படுமே தவிர இங்குள்ள மக்களுக்கு அளிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

      Delete

Post a Comment