ஒ(இ)ருவிபத்து

அது குறுக்கே பாய்ந்தகணம்
வசமிழந்தது என் வாகனம்,

மோதிய மறுகணம்
வெவ்வேறு கோணங்களில்
சிதறிய செல்போனும்,
சில்லரையும்
தரை தொட்டது
ஒரே கணம்.

தோளுக்குள் கை நுழைத்து
தூக்கியவர்மேல்
டாஸ்மார்க் வாசம்,

"பாத்துவரக்கூடாது?"
வண்டிதூக்க வந்தவர்.

"இவரு கரிட்டாத்தான் வந்தாப்பல‌
மாடுதான் குறுக்க பூந்திச்சி"
எதிர் குரல்.

"இதுங்க ரோதனை தாங்கலை"
தூரத்தில் யாரோ.

நாலு தையல்,
இரண்டு ஊசி,
காலில் கட்டு,
கையில் பிரிஸ்கிரிப்ஷன்
எல்லாம் முடிந்து
வெளியேவந்தால்...

காலுக்குள் வால் நுழைத்து
தாங்கித் தாங்கி கடந்தது
நாய் ஒன்று எனைப்போலவே.

"ஏத்திட்டு போய்கினே இருக்கானுங்க
பாவிங்க‌"
அனுதாபப்பட்டாள் கிழவி.

நான் மோதிய மாடு என்னவானதோ.

Comments

  1. மோதியதோ மோதப்பட்டதோ
    அது அதன் தவறோ நம் தவறோ
    எதைப்பற்றியும் ஆராயாது
    எதிராளியை உடனடியாகக்
    குற்றம் சொல்லும் உலகில்
    உங்கள் சிந்தனை வித்தியாசமாக உள்ளது.
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இத இத எதிர் பார்த்தேன் நடந்துருச்சி

    ReplyDelete

Post a Comment